சிரம்பான், ஏப்ரல்.26-
நெகிரி செம்பிலான், லெக்காஸ் நெடுஞ்சாலையில் 'சூப்பர்மேன்' பாணியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 18 வயதும் 21 வயதும் கொண்ட இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 12 மணி முதல் 4:30 மணி வரை நடத்தப்பட்ட சாலைக் காலித்தன எதிர்ப்பு நடவடிக்கையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பாக மாற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 50 அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
பிடிபட்ட இரு இளைஞர்களும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








