பெண்ணொருவரின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைப் பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இன்று அலோர் காஜா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
காரில் இருந்தபோது 20 வயதுடைய அந்தப் பெண்ணை பாலியல் ரீதியான செயலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக 24 வயதுடைய முகமது அமீர் நபில் சலேஹுதின் என்ற அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவர், இன்னமும் படித்துக் கொண்டிருப்பதால் பிணைத் தொகையைக் குறைக்குமாறு அவரது வழக்கறிஞர் முறையிட்டதை அடுத்து, நீதிமன்றம் 4 ஆயிரத்து 600 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க அனுமதித்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.








