கோத்தா திங்கி, ஜூலை.26-
முகநூலில் வெளியான போலி முதலீட்டு விளம்பரத்தை நம்பிய 58 வயதான இல்லத்தரசி ஒருவர் 1 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
இது குறித்து கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Yusof Othman கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூலை 19 -ஆம் தேதி, "XM Royal" என்ற முதலீட்டு திட்டத்தின் விளம்பரத்தை முகநூலில் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தை பயன்படுத்திய மோசடிக் கும்பல், 300 ரிங்கிட் முதலீடு செய்தால் இரண்டு மணி நேரத்தில் 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து பொதுமக்களை ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீட்டில் கிடைத்ததாகக் கூறப்பட்ட லாபத் தொகை 'முடக்கப்பட்டுள்ளதாக' கூறி, அதை விடுவிக்க வேண்டும் என்ற பெயரில், பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஜூலை 19 முதல் 23-ஆம் தேதி வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு எட்டு முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.
இதன் மூலம் அவர் மொத்தமாக 1 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரிங்கிட் இழந்துள்ளதாகவும் Yusof Othman தெரிவித்துள்ளார்.








