நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வியான டிவெட் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் சந்தை தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் 30 வரையிலான முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும், மை பியூச்சர் ஜாப்ஸ் தளத்தின் வாயிலாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 836 டிவெட் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் தொழில்துறையினரால் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப, உள்ளூர் திறனாளர்களின் மீதான தொழில்துறையின் அதீத நம்பிக்கையை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த வேலைகளுக்கான சராசரி மாதச் சம்பளம் 3,658 ரிங்கிட் ஆகும். அனுபவம், தகுதி மற்றும் தொழில்முறை சான்றிதழ்களின் அடிப்படையில் சில முக்கியப் பிரிவுகளுக்கு இதைவிடக் கூடுதல் சம்பளமும் வழங்கப்படுகிறது. உற்பத்தி, ஆட்டோமேஷன், பொறியியல், செமிகண்டக்டர், ஐசிடி மற்றும் ஆட்டோமோட்டிவ் போன்ற நாட்டின் பொருளாதாரத்தை உந்தித்தள்ளும் முக்கியத் துறைகளில் இந்த வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
டிவெட் பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேர்ந்தெடுத்துப் பலன் பெற, மை பியூச்சர் ஜாப்ஸ் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.








