பாங்கி, ஜூலை.19-
பாங்கி, பண்டார் புக்கிட் மகோத்தா அருகே பெரியவர்களின் கவனிப்பின்றி சாலையோரத்தில் சுற்றித் திரிந்த மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உள்நாட்டவர்களான அச்சிறார்களைப் பொதுமக்கள் நேற்று காலை 11.57 மணியளவில் பாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
அச்சிறார்கள் நல்ல நிலையில் இருப்பதும் பராமரிப்பாளர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. குடியிருப்புக்கு அருகிலுள்ள இடத்தில் பொதுமக்கள் அவர்களைக் கண்டுபிடித்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தொடர்பு கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாங்கி காவல் நிலையத்தில் ஆஜரானதாகக் கூறிய அவர், பின்னர் அவ்விருவரும் பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார்.








