ஜோகூர் பாரு.ம் மார்ச்.07-
ஜோகூர் பாரு, பாண்டான் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் இன்று காலை 10 மணியளவில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 81 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் இடங்கள் குறி வைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 46 பேர் வங்கதேசத்தினர், 22 பேர் மியன்மார் நாட்டினர், 10 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியா, நேபாளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். முறையான ஆவணங்கள் இன்றி இவர்கள் மளிகைக் கடைகளில் காய்கறி மற்றும் இறைச்சி விற்பனையாளர்களாகவும், உணவு விடுதிகளிலும் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவு தடுப்பு முகாமிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர் என்று முஹமட் ருஸ்டி குறிப்பிட்டார்.








