தேசிய நிலையிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், பினாங்கு, பட்டர்வொர்த் பகுதியைச் சேர்ந்த 56 வயது வரலாற்று ஆசிரியர் எம். முனிசுவரன், பேங்க் சிம்பானான் நேஷனல் சேமிப்புத் திட்டக் குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட் வென்று லட்சாதிபதியாகியுள்ளார்.
பிஎஸ்என் பிரீமியம் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் 123-வது மில்லியனராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனிசுவரனுக்கு, அதன் தலைமை நிர்வாகி முஜிபுர் ரஹ்மான் முன்னிலையில் 10 லட்சம் ரிங்கிட்டிற்கான மாதிரி காசோலை வழங்கப்பட்டது. முனிசுவரனுடன் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரது மனைவி ஜி. மஞ்சுளாவும் உடனிருந்தார்.
கடந்த 1990 முதல் பிஎஸ்என் கணக்கு வைத்துள்ள முனிசுவரன், கடந்த 11 ஆண்டுகளாக இச்சேமிப்புத் திட்டத்தில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறார். ஒரே இரவில் மில்லியனராக மாறிய போதிலும், இப்போதைக்கு இந்த பணத்தை அவர் பயன்படுத்தப் போவதில்லை என்றும், 2030-இல் தனது ஓய்வுக் காலத்திற்குப் பிறகே இதற்கான முறையான நிதித் திட்டமிடலைச் செய்யவுள்ளதாகவும் முனிசுவரன் தெரிவித்துள்ளார்.








