கோலாலம்பூர், டிசம்பர்.10-
பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமையானது சற்று தணிந்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக, வடக்கு சரவாக்கில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, பேராக் மாநிலத்தில், ஹிலீர் பேரா மற்றும் மஞ்சோங் ஆகிய பகுதிகளில், 42 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹிலீர் பேராவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேரும், மஞ்சோங்கில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.
அதே வேளையில், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி, 191 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நேற்று இரவு இருந்த எண்ணிக்கையை விட சற்று கூடுதலாகும்.








