பண்டார் உத்தாமா பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது மாணவர், தனது தரப்பு வாதத்தை முன்வைக்க ஷா ஆலம் உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கு விசாரணையின் முடிவில், அம்மாணவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி அட்லின் அப்துல் மஜித் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாணவரின் வழக்கறிஞர் கிட்சன் ஃபோங் தெரிவித்துள்ளார்.
ஆறு நாட்கள் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணையில் 11 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி எஸ்.எம்.கே. பண்டார் உத்தமா டாமன்சாரா பள்ளியின் பெண்கள் கழிவறையில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக அம்மாணவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது.
எனினும், சிறார் சட்டம் 97(1) பிரிவின்படி, குற்றம் இழைத்த போது சிறுவனாக இருந்த அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.
அதற்குப் பதிலாக, 97(2) பிரிவின் படி, குற்றம் நடந்த மாநிலத்தின் சுல்தான் அல்லது யாங் டி-பெர்த்துவா நெகிரி-யின் விருப்பத்திற்கிணங்கவும், கூட்டரசுப் பிரதேசமாக இருந்தால், மாமன்னரின் விருப்பத்திற்கிணங்கவும் அந்த மாணவர் தடுத்து வைக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.








