பிகேஆர் கட்சியின் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாடு நாளை மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் தொடங்குகிறது.
இதில் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் 3,000 -த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெறும் பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிகேஆர் ஆகியவற்றின் இணைந்த கூட்டத்தை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார் தொடங்கி வைக்கிறார்.
அதேவேளையில், வரும் சனிக்கிழமை நடைபெறும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில், பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் கொள்கை உரையாற்றவுள்ளார்.
இதனிடையே, இம்மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“சீர்திருத்தத்தைப் புதுப்பித்து, நாகரிகமான சமூகத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் பொருளாதாரம், கல்வி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
கட்சியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள், அன்வாரின் கொள்கை உரை குறித்து விவாதிக்க உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, கட்சிக்காக இறுதிவரை சேவையாற்றிய உறுப்பினர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ஐந்து குடும்பங்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை விவாதங்களை முடித்து இம்மாநாட்டை அன்வார் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யவுள்ளார்.








