பெரிய வல்லரசு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சர்வதேச அளவில் உண்மையை உரக்கச் சொல்வதில் மலேசியா தனது சுதந்திரமான மற்றும் இறையாண்மைமிக்க நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று கிளந்தான், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்த மலேசியாவின் துணிச்சலான குரலைச் சுட்டிக்காட்டினார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடனான உரையாடலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்த மலேசியாவிற்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
ஈரானில் பள்ளிச் சிறுவர்கள் மற்றும் ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இதேபோன்ற தாக்குதல் மேற்கத்திய நாடுகளில் நடந்திருந்தால் உலகம் முழுவதும் மாதக்கணக்கில் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கும். ஆனால் ஒரு இஸ்லாமிய நாட்டில் குழந்தைகள் கொல்லப்படும்போது பல நாடுகள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது," என டத்தோஸ்ரீ அன்வார் சாடினார்.








