நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் பழுதாகி சாலையோரம் தவித்த சீன முதியவர் ஒருவருக்கு, மலாய் இன மெக்கானிக் கட்டணம் ஏதுமின்றி உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் பெட்டாலிங் ஜெயாவில் நடந்துள்ளது.
பழுதுபார்ப்புக் கட்டணமாக 145 ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த முதியவரின் இ-வாலட்டில் மிகக் குறைந்த தொகையே இருப்பதை அறிந்த மெக்கானிக், பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
"இன்று நான் உங்களுக்கு உதவினால், எதிர்காலத்தில் எனக்குத் தேவைப்படும்போது மற்றவர்கள் எனக்கு உதவுவார்கள்" என்று மெக்கானிக் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்து போன முதியவர், அவரை ஆரத்தழுவி நன்றி தெரிவித்தார். இந்த மனிதாபிமானச் செயல் தொடர்பான வீடியோ டிக்-டாக்கில் வைரலாகி, பல்லாயிரக்கணக்கான மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.








