வேப் திரவங்களில் “பியூ பியூ” எனப்படும் புதிய செயற்கை போதைப்பொருள் கலவை கண்டறியப்பட்டுள்ளதால், மலேசியாவில் மின்னணு சிகரெட் அல்லது வேப் சாதனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை வலியுறுத்தியுள்ளார்.
“பியூ பியூ” என அழைக்கப்படும் வேப் திரவங்களில் கெட்டமின் மற்றும் ஃபெண்டானில் உள்ளிட்ட பல்வேறு செயற்கை போதைப்பொருட்கள் கலக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் கும்பலானது, மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருட்களை வேப் சாதனங்களில் மறைத்து அதனைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், இந்த வேப் சாதனங்களானது இளையோரை அதிகம் கவர்வது மிகவும் கவலைக்குரியது என்றும் அயோப் கான் தெரிவித்துள்ளார்.








