ஜெனீவாவில் நடைபெற்ற 114-வது அனைத்துல தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம், உலகளாவிய தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பில் மலேசியா தனது பங்களிப்பைத் தொடர்ந்து தீவிரமாக வலுப்படுத்தி வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேகமாக மாறிவரும் இன்றைய பணி உலகின் மாற்றங்களை நிர்வகிப்பதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை உருவாக்குவதில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகளின் மேம்பாடு போன்ற விடயங்களில், தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, மிகவும் சுறுசுறுப்பான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்குவதற்காக முக்கிய சர்வதேச நிறுவனங்களுடன் மலேசியா மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழிலாளர் சக்தியின் மீது புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்காமல் தடுப்பதற்கு, தெளிவான மற்றும் பயனுள்ள கொள்கைக் கட்டமைப்புகளுடன் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சமநிலைப்படுத்துவது அவசியம் என்று அம்மாநாட்டில் மலேசியா வலியுறுத்தியுள்ளதையும் ரமணன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மலேசியாவின் இந்தப் பங்கேற்பு, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதிலும், மிகவும் நிலையான, நியாயமான மற்றும் முற்போக்கான உலகளாவிய தொழிலாளர் விதிமுறைகளை வடிவமைப்பதிலும், ஓர் ஆக்கபூர்வமான மற்றும் செல்வாக்கு மிக்க குரலாக நாட்டின் நிலையை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் ரமணன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



















