பேராக் மாநிலம் கோலா கங்சாரில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர் குழுவால் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அத்தகைய சம்பவம் எதுவும் அங்கு நடக்கவில்லை என்பதை கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஹைஷாம் ஹாரூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு இதுவரை எந்த புகாரும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்கள் ஊகங்கள் செய்யவோ, எதிர்மறையான கருத்துகளைப் பகிரவோ வேண்டாம் என்று நேற்று வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கிடத்த தகவலில் படி, அப்பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர், மாணவர் ஒருவரின் தலைமுடியை சீராக இல்லாததைக் கண்டு அதை வெட்டியதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் அந்த ஆசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், இதனை தற்போது போலீசார் முற்றிலும் மறுத்துள்ளனர்.








