கோலாலம்பூர், ஜனவரி.30-
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 20,000 புதிய ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
2026 முதல் 2035 ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய கல்விப் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு முதல் 6 வயதுக் குழந்தைகள் விருப்பத்தின் அடிப்படையில் முதலாம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தத் தேவையான முன்னேற்பாடுகளில் இதுவும் ஒன்று என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நியமன நடைமுறைகள் கல்விச் சேவை ஆணையத்தின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள், கற்பித்தல் தரத்தை நிலைநிறுத்த ஆசிரியர் கல்விக் கழகங்களில் பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும்.
அதே வேளையில் நாட்டின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த மடானி அரசாங்கம் கொண்டுள்ள தொடர் முயற்சியின் வெளிப்பாடாக இந்தத் திட்டம் அமைகிறது என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








