கோலாலம்பூர், பிப்ரவரி.27-
பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்ட ஊழல் வழக்கில், அப்போதைய முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு ஒரு மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பணப்பை வழங்கப்பட்டதாக தொழிலதிபரும், டத்தோ கீதாஞ்சலியின் கணவருமான ஜி. ஞானராஜா இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2017 ஆகஸ்ட் 20 அன்று லிம் குவான் எங்கைத் தாம் முதன் முதலில் சந்தித்ததாக ஞானராஜா கூறினார். இந்த வழக்கில் மற்றொரு முக்கிய சாட்சியான தொழிலதிபர் ஸாருல் அஹ்மாட் ஸுல்கிஃப்லி செலுத்திய காருக்குள் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
ஸாருலின் அறிவுறுத்தலின்படி, 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் இருந்த பை லிம் குவான் எங்கிற்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு, கோலாலம்பூர், Solaris Dutamas- ஸில் உள்ள Publika வணிக வளாகத்தில் அவரை ஸாருல் இறக்கி விட்டதாக ஞானராஜா தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.
ஞானராஜா கூறிய இந்த சாட்சியத்தை லிம் குவான் எங்கின் வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் கடுமையாக மறுத்தார். "பினாங்கு மாநில அரசின் சீருடை அணிந்திருந்த லிம் குவான் எங், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு வணிக வளாகத்திற்கு இவ்வளவு பெரிய ரொக்கப் பையை எடுத்துச் சென்றார் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் சாத்தியமற்றது" என்று ராம் கார்ப்பால் வாதிட்டார்.
வழக்கறிஞர் ராம் கர்ப்பாலின் இந்த வாதத்திற்கு பதிலளித்த ஞானராஜா, "சில விஷயங்கள் அர்த்தமற்றதாகத் தோன்றினாலும், அவை உண்மையில் நடந்தன" என்று வலியுறுத்தினார்.
கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் 10 விழுக்காடு லாபத்தைப் பங்காகக் கேட்டது மற்றும் ஸாருலிடமிருந்து 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை ஜசெக.வின் முன்னாள் தலைவரான லிம் குவான் எங் எதிர்கொண்டு வருகிறார்.
மேலும், 208.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பினாங்கு மாநில நிலத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








