கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் மகன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் தாக்கப்பட்டுள்ளார்.
இதில் காயமுற்றதாக நம்பப்படும் ரஃபிஸியின் மகன் தற்போது மருத்துவமனையின் கண்ணாணிப்பில் இருந்து வருகிறார். தனது மகனை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்பு, கருப்பு நிற உடையணிந்த நிலையில், முகத்தைத் தலைக்கவசத்தால் முழுமையாக மூடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் தனது மனைவியின் காரை பின் தொடர்ந்து வந்தது, அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் தெரிய வந்துள்ளது என்று ரஃபிஸி விவரித்தார்.
பின்பு வெகுநேரம் அந்த பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் காத்திருந்த அந்த இரு நபர்கள், மகனும், மனைவியும் காரை நோக்கித் திரும்ப வந்த போது, தமது மகனைப் பிடித்து இழுத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று ரஃபிஸி குறிப்பிட்டார்.
தற்போது சிகிச்சைக்காக தனது மகன் புத்ரா மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஃபிஸி தெரிவித்தார்.








