ஜார்ஜ்டவுன், மார்ச்.22-
பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நிலவரி உயர்வு குறித்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்-உடனான பகிரங்க மோதலைத் தொடர்ந்து, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜசெக. வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காத வகையில், இனி இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப் போவதில்லை என்றும் சாவ் கோன் இயாவ் அறிவித்துள்ளார். நிலவரி உயர்வால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், அந்தந்த மாவட்ட நில அலுவலகங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பொதுவெளியில் லிம் குவான் எங்கும், சாவ் கோன் இயாவ்வும் மோதிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்று அதிருப்தி தெரிவித்த அந்தோணி லோக், கட்சி ஒழுக்கத்தைப் பேணுமாறு இருவரையும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








