ஜார்ஜ்டவுன், டிச.13-
ஆலோங் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் நான்கு இளைஞர்கள், மாது ஒருவரை கடத்திச்சென்று ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக பினாங்கு, ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
30 வயது ஆர். நரேந்திரன், 28 வயது எம்.அர்வீன் ராஜ், 25 வயது ஆர்.ஜெய்ரூபன் மற்றும் 29 வயது முகமட் ஷாபிக் அப்துல்லா என்று அந்த நான்கு நபர்களும் மாஜிஸ்திரேட் சித்தி நுருல் சுஹாய்லா பஹாரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த நால்வரும், இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டுச் சேர்ந்த 41 வயது இந்தோனேசிய மாதுவை பலவந்தமாக தூக்கிச் சென்று ஒரு வீட்டில் சட்டவிரோதமாக அடைந்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதிக்கும் 7 தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பட்டர்வொர்த், பூலாவ் தீக்குஸ், ஜாலான் கெலாவியில் அந்த மாதுவை கடத்திச் சென்று செபராங் பிறை தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட பிறை, ஜாலான் பாருவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆ ண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 365 பிரிவின் கீழ் நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








