1MDB ஊழல் தொடர்பான 42 பில்லியன் ரிங்கிட் நிதியில், இதுவரை சுமார் 74.5 விழுக்காடு நிதி மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் SPRM தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டான்ஸ்ரீ அசாம் பாக்கி, கடந்த 2025-ஆம் ஆண்டு வரை மொத்தம் 31.3 பில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது அனைத்துலக அளவில் ஒரு நிதிக்குற்ற வழக்கில் மீட்கப்பட்ட மிக உயர்ந்த தொகைகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் FBI, நீதித்துறை மற்றும் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த மீட்பு நடவடிக்கைகள் சாத்தியமானதாக டான்ஸ்ரீ அசாம் பாக்கி விவரித்தார்.
இதில் சொகுசுக் கப்பல் 'Equanimity', தனியார் விமானம் மற்றும் வெளிநாட்டுச் சொத்துக்கள் அடங்கும். மேலும், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டெலாய்ட் போன்ற அனைத்துலக நிறுவனங்களுடனான தீர்வு ஒப்பந்தங்களும் இதில் முக்கிய பங்கு வகித்தன.
"மக்களின் ஒவ்வொரு காசும் திரும்பப் பெறுவதை உறுதி செய்வோம்" என அசாம் பாக்கி உறுதியளித்தார்.












