மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மும், தேசிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான பெட்ரோனாஸ் – ஸும், மாமன்னரின் மேற்பார்வையில் வர வேண்டும், மாமன்னருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் விடுத்துள்ள அறைகூவலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தில் இப்படியொரு அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் ஜோகூர் சுல்தான் முன்வைத்துள்ள இப்பரிந்துரையானது, அரசமைப்பின் ஆட்சியாளர் என்ற முறையில் மலாய் ஆட்சியாளர்களின் பங்களிப்பு தொடர்பாக சில முக்கிய கேள்விகள் எழுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும், மாமன்னருக்கும் உள்ள பொறுப்புகள் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து அரசமைப்பிலும், சட்டங்களில் மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எந்தவொரு சட்டமாக அல்லது கொள்கையாக இருந்தாலும் ஆட்சியாளர்களும், நாடாளுமன்றமும் இணைந்தே முடிவு எடுக்க முடியும். இது தரப்புகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு என்பது இணைந்தே முடிவு எடுப்பது, முழு அதிகாரத்தை விட பாதுகாப்பானதாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.








