கோலாலம்பூர், நவ. 19-
தாய்லாந்து மாணவர்கள், ஒவ்வொரு நாளும் கிளந்தான், சுங்கை கோலோக் ஆற்றைக்கடந்து மலேசியாவில் உள்ள பள்ளிகளில் பயில்வதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்ற அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சம்பந்தபட்ட மாணவர்கள், மலேசியர்களாக இருக்குமானால், அவர்கள் ஏன் ஒவ்வொரு நாளும் தாய்லாந்திலிருந்து சுங்கை கோலோக் நதியை கடந்து, மலேசியப் பள்ளிகளில் பயில வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது என்று ஃபாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.
மலேசிய மாணவர்கள், மலேசியாவிலேயே கல்விப்பயில்வதற்கு அவர்களுக்கு பலதரப்பட்ட வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளன. ஆனால், தாய்லாந்திலிருந்து ஒவ்வொரு நாளும் மிக அபாயகரமான சுங்கை கோலோக் நதியை கடந்து வந்து, மலேசியப் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஃபாட்லினா சீடேக் தெரிவித்தார்.
எனினும் ஒவ்வொரு நாளும் தாய்லாந்திலிருந்து எத்தனை மாணவர்கள் சுங்கை கோலோக் நதியை கடந்து, மலேசியப்பள்ளிக்கு வருகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
தாய்லாந்தை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள், ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாக சுங்கை கோலோக் நதியை கடந்து, மலேசியப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகம் அம்பலப்படுத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் ஃபாட்லினா சீடேக் இதனை தெரிவித்தார்.
ஆற்றின் வாயிலாக மலேசியாவின் எல்லையை கடப்பதற்காக சம்பந்தப்பட்ட தாய்லாந்து மாணவர்கள் ஒவ்வொரு நாளும் காலை 6.30 மணிக்கு படகுக்காக காத்திருக்கின்றனர். இவ்வாறு படகில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு பயணக்கட்டணமாக தலா ஒரு வெள்ளி வசூலிக்கப்படுகிறது..
கிளந்தானை நோக்கி வருவதற்கு Pangkalan Jambu, Ibrahim Pencen மற்றும் Paun உட்பட ஐந்து சட்டவிரோத படகுத்துறையை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.








