பேராக், பத்து காஜா-வில் விவாகரத்து கோரிய 32 வயதுடைய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் இன்று தொடங்கி 7 நாள்களுக்கு விசாரணைக்காக தடுப்புக்காவலிடப்பட்டார்.
36 வயதுடைய அவ்வாடவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் அஸ்லின் ஜெட்டி ஜைனல் அபிடின் வழங்கினார்.
வேலையற்ற அவ்வாடவர், ஜாலான் பெஜாபாட் போஸ்-சிலுள்ள ஒரு தங்கும்விடுதியில் அவரது மனைவியை கொலை செய்த பிறகு நேற்று மாலை மணி 2 அளவில், போலீஸ் நிலையம் ஒன்றில் சரணடைந்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட தங்குவிடுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீஸ், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியையும் கண்டெடுத்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டிருந்தன.








