கோலாலம்பூர், பிப்ரவரி.22-
கோம்பாக் பேருந்து முனையத்தில் சீனப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகன சோதனையில், போதைப் பொருள் உட்கொண்ட நிலையில் பேருந்து ஓட்டிய 50 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்ராஜெயாவிலிருந்து திரங்கானு மாநிலத்தின் பெசுட் நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்தைச் சோதனையிட்ட போது, அதன் டயர்கள் மிகவும் தேய்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததைச் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையினரால் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அந்த ஓட்டுநர் methamphetamine எனும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியான கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்துள்ளார்.








