திரெங்கானு மாநிலம் அலூர் துமான் அருகே கோலா திரெங்கானு–குவாந்தான் சாலையில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுநர் பயிற்சி நிலையத்தின் வேலியில் மோதியதில் 65 வயது முதியவர் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் விபத்து தொடர்பாக பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமது சோபியான் ரெட்சுவான் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மஸ்ஜித் கெலுலுட்டிலிருந்து புலாவ் கெரெங்காவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது காரின் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கார் சாலையின் வலதுபுறம் சென்று ஓட்டுநர் பயிற்சி நிலையத்தின் வேலியில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








