அடுத்தவர் மனைவியை அல்லது கணவரை வசீகரிப்பது குற்றம் என்பதை உறுதி செய்வதற்கு இவ்விவகாரத்தை நாடாளுமன்றம் ஒரு சட்டமாக கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஓய்வுப்பெற்ற முன்னாள் அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹிஷாமுடின் யுனுஸ்தெரிவித்துள்ளார்.
அடுத்தவரின் கணவர் அல்லது அடுத்தவரின் மனைவி யார் தவறு இழைத்து இருந்தாலும் அவர்களின் செயல் குற்றமே. அதற்கான தண்டனையை விதிப்பதற்கு சட்டத்தில் தெளிவு தேவை என்று அந்த முன்னாள் நீதிபதி வலியுறுத்துகிறார்.
பெட்டாலிங் ஜெயாவில் நடந்த ஒரு சம்பவத்தில் அடுத்தவரின் மனைவியை வசீகரித்துக்கொண்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவருக்கு எதிராக அந்தப் பெண்ணின் கணவர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அந்த நபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தை பிரயோகித்து இருப்பது, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கடந்த வாரம் புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், ஆண்களை மட்டுமே தண்டிக்கிறது. ஆனால், அந்த ஆணுக்கு துணைப் புரிந்த அல்லது அந்த ஆணின் வக்கிர செயலுக்கு உடந்தையாக இருந்து, தவறு இழைத்து இருக்கும் பெண்ணை தண்டிப்பதில்லை என்பது காலத்திற்கு பொருந்தி வரக்கூடியது அல்ல என்று கூட்டரசு நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.
அரசமைப்பு சட்டம் 8 ஆவது விதி, 2 ஆவது ஷரத்தின் கீழ் சட்டத்தின் முன் அனைவருக்கும் சம பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இரு பாலரும் குற்றம் இழைத்து இருக்கும் பட்சத்தில் ஒருவரை மட்டும் தண்டிப்பது என்பது சட்டத்திற்கு முரணானதாகும் என்று தலைமை நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.








