பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03-
கடந்த ஆண்டு Putra Heights பகுதியில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் வெடிவிபத்து தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு Kampung Kuala Sungai Baru குடியிருப்பாளர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து குடியிருப்பாளர் நலச் சங்க செயலாளர் Badly Nordin வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறியும் உரிமை மக்களுக்கு இருப்பதாகக் கூறி, முழு அறிக்கை வெளியாகும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 -ஆம் தேதி நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் 87 வீடுகள் அழிந்ததுடன், 148 வீடுகள் சேதமடைந்து, 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 36 பேர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், கூட்டரசு அமைப்புகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் பரிசீலனையில் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








