நீலாய், டிசம்பர்.29-
நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, நெகிரி செம்பிலான் போலீசார் இதுவரை 18 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான 62 வயதுடைய யியோ ஹோக் சுன் என்பவர் கடந்த சனிக்கிழமை மந்தினில் கைது செய்யப்பட்டார். அவர், ஜனவரி 3 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கட்ட விசாரணையின்படி, இந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒரு நபரால் செய்யப்பட்டதாகவும், இதற்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் அல்லது எந்தவொரு தீவிரவாதக் கும்பல்களுக்கும் தொடர்பில்லை என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.








