கோலாலம்பூர், ஜூலை 09-
தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர்கள் அல்லது அரசு துறைகள் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு துறைகள் அரசாங்கம் இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என்பது அமைச்சரவையின் முடிவாகும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
காரணம், ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. ஊழல் கலாசாரம் தொடரக்கூடாது என தாம் விரும்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இருப்பினும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பத் தேவையில்லை என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விதிகள் மீறப்படும் பட்சத்தில் அமைச்சரவையின் உத்தரவு மீறப் பட்டதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்கும் என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பிரதமர் தெரிவித்தார்.








