கடந்த ஜூலை மாதம் ஷா ஆலாம், ஐ-சிட்டி பகுதியில் கடத்தப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்ட 46 வயது நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரம்பானில் சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் தயாரிக்கும் கும்பலின் தலைவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் வெளியிட்டுள்ள தகவலில், தற்போது அந்த நபர் 1985-ன் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் 60 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கும்பலில் அவரது தொடர்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி போலீசார் அந்த நபரை மீட்டதுடன், 7 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கோரியதாகச் சந்தேகிக்கப்படும் 6 பேரை கைது செய்திருந்தனர்.
இதனிடையே, சிரம்பானில் சுட்டுக் கொல்லப்பட்ட 52 வயது நபர் 1990-களில் இருந்தே போதைப்பொருள் பதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், கடத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் பிற குற்றங்களுக்கான பழைய குற்றப் பதிவுகள் அவருக்கு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








