சரவாக் மாநிலம் லோங் லெல்லாங் பகுதியில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல் பாகங்கள் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக சரவாக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விமானி கேப்டன் ஸைனோல் அஃபிக் பீ ஷாம் மற்றும் நான்கு மருத்துவப் பணியாளர்களான டாக்டர் ஐனுல் பாரா கமாருடின், அலேக்சன் அடிட் ஹென்ரி, டெப்ரா மோசெட் மற்றும் ஜெஸ்சி ஜோக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோரமான இவ்விபத்தில் அவர்களின் உடல் பாகங்கள் தீயில் கருகிய நிலையில் கிடைத்ததால், குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மரபணு மாதிரிகளின் அடிப்படையில் இறுதி அடையாளம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் முஹமட் ஸைனால் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 லட்சம் ரிங்கிட் வழங்குவதாக சரவாக் மாநில முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் அறிவித்துள்ளதோடு, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை யாயாசான் சரவாக் ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.








