கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-
இந்தியா, கேரளா, பூர்வீகத்தை சேர்ந்தவர் என்றும், தாம் ஓர் இந்திய முஸ்லிம் என்றும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக தம்மை மகாதீர் இஸ்கண்டார் குட்டி என்று கூறி, தம்முடைய வாழ்வியலுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டி, அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள முன்னாள் பிர தமர் துன் மகாதீர் முகமது, அந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
ஒரு தனிநபரின் முக்கிய அடையாள ஆவணம், ரகசியம் காக்கப்பட வேண்டும். அதனை பகிரங்கப்படுத்த முடியாது. ஆனால், தேசிய பதிவு இலாகாவிற்கு தலைமையேற்ற அமைச்சர் என்ற முறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய அடையாளக் கார்ட்டை பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அம்பலப்படுத்தி, தம்மை அவமதித்து விட்டதாக கூறி, அன்றைய அம்னோ துணைத் தலைவரான அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக துன் மகாதீர் இந்த மான நஷ்ட வழக்கை தொடுத்து இருந்தார்.
உயர் நீதிமன்ற ஆணையர் கான் டெச்சியாங் முன்னிலையில் முதல் முறையாக விசாரணைக்கு வரும் இந்த மானநஷ்ட வழக்கு காலை 10 மணிக்கு தொடங்கியது.
துன் மகாதீரின் உண்மையான பெயர் மகாதீர் இஸ்கண்டார் குட்டியா? இல்லையா? என்பதை அலசி ஆராயும் சட்ட ஆவணங்கள் தொடர்புடைய இந்த கவன ஈர்ப்பு வழக்கில் விசாரணையை பார்வையிடுவதற்கு துன் மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சிதி ஹஸ்மா மிஹமத் அலி மற்றும் துன் மகாதீரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.








