கோலாலம்பூர், பிப்ரவரி.19-
நேற்று சமூக வலைதளங்களில் வைரலான குழந்தை சித்ரவதை வீடியோவில் உள்ள நபர், கடந்த ஆண்டே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபாடில் மார்சுஸ் விடுத்துள்ள அறிக்கையில், கோலாலம்பூர் ஸ்தாப்பாக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது கணவர் குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தும் வீடியோக்களைக் கண்டதும், அக்குழந்தையின் தாயார் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி புகார் அளித்ததாகக் கூறினார்.
அதன் பேரில், புகார்தாரரின் கணவரும் குழந்தையின் மாற்றான் தந்தையுமான 32 வயது நபரைக் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர், டிசம்பர் 26-ஆம் தேதி கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்று ஃபாடில் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நபர் மீதான குற்றச்சாட்டுகளின் விவரம் அல்லது அவர் விசாரணையை எதிர்கொள்கிறாரா என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்த வழக்கு 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டப் பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் குழந்தைகளைக் கைவிடுதல், அலட்சியப்படுத்துதல் அல்லது அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான காயங்களை ஏற்படுத்துவதைக் குற்றமாகக் கருதுகிறது என்று அந்த உயர் போலீஸ் அதிகாரி விளக்கினார்.








