நாட்டில் மிக வளர்ச்சி கண்டு வரும் மாநிலமான சிலாங்கூரை, 2030ஆம் ஆண்டிற்குள் ஆசியான் பிராந்தியத்தின் பொருளாதார முன்மாதிரியாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட 'இரண்டாவது சிலாங்கூர் திட்டமான RS-2 ஐ- மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சமர்ப்பித்துள்ளார். இது 2021 முதல் 2025 வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட முதலாவது திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
2026 முதல் 2030 வரையிலான இந்த 5 ஆண்டு காலப் பொருளாதார மற்றும் சமூகத் திட்டமானது, சிலாங்கூரின் பொருளாதார மதிப்பை 600 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 200 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், சிலாங்கூர் மக்களின் சராசரி மாத வருமானம் 14,500 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.
இதற்காக, செமிகண்டக்டர், விண்வெளித் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கேரி தீவின் மூன்றாவது துறைமுகம் போன்ற முக்கியத் துறைகளில் மாநில அரசு கவனம் செலுத்தவுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசின் நிதி, தனியார் முதலீடுகள் என மொத்தம் 33.31 பில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் இந்த இரண்டாவது சிலாங்கூர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.








