Aug 8, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

Share:
  1. ஆசிரியர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க பள்ளி நிர்வாகிகள் நெகிழ்வான நிர்வாக முறைகளைக் கடைப்பிடித்து, ஆசிரியர்களுக்கு ஆதரவான பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என பேராக் மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோக் கைருடின் அபு ஹனிபா தெரிவித்துள்ளார்.

    இன்று சனிக்கிழமை நடைபெற்ற பேராக் மாநில தோடாக் அகாடமி இலக்கவியல் கல்வி மையம் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மூத்த உதவி ஆசிரியர்களின் அணுகுமுறையே பணியிடத்தில் ஆசிரியர்களின் மனநிலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஆசிரியர்களின் குடும்பத்தில் அவசரநிலை ஏற்படும் போது, குறிப்பாக குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது அல்லது குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பது போன்ற சூழல்களில், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு பதிலாக வகுப்புகளுக்குப் மாற்று ஆசிரியர்களை ஏற்பாடு செய்து நிர்வாகிகள் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும், மாணவர்களை போட்டிகளுக்குத் தயார்படுத்தும் ஆசிரியர்களைப் பாராட்டுவது அல்லது அவர்களுக்கு பள்ளி உணவகத்தில் இலவச உணவு வழங்குவது போன்ற சிறிய அங்கீகாரங்கள் கூட ஆசிரியர்களின் மனஉறுதியை கணிசமாக அதிகரிக்கும் என்றும் கைருடின் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில், மனஅழுத்தத்தில் இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து தமக்கு நேரடியாக பல கோரிக்கைகள் வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களுக்கு நியாயமான பணிச்சூழலை உருவாக்கும் அதிகாரமும் பொறுப்பும் பள்ளி நிர்வாகிகளுக்கே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News