May 14, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி ஒளியாய் மித்ரா
தற்போதைய செய்திகள்

மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி ஒளியாய் மித்ரா

Share:

மலேசிய இந்திய சமூகத்தின் கல்விப் புரட்சியில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது மித்ரா. உயர்கல்விக்கூடங்களில் பயிலும் வசதி குறைந்த பி40 பிரிவு இந்திய மாணவர்களின் டிஜிட்டல் கல்வித் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் நோக்கில், 7.95 மில்லியன் ரிங்கிட் பிரம்மாண்ட நிதி ஒதுக்கீட்டில், 3,000 உயர்தர மடிக்கணினிகளை மித்ரா வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாயாப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய இந்த எழுச்சிமிகு விழாவிற்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் வருகை தந்து, மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வழங்கி திட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் ஆகியோரின் நேரடி முன்னிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் கைகளில் இந்த டிஜிட்டல் கல்வி ஆயுதம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் தடையற்ற கல்வி மேம்பாட்டிற்காக, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட HP (Intel Core i5, 16GB RAM, 512GB SSD) மடிக்கணினிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட பி40 பிரிவு மாணவர்கள், ‘திசைகள்’ ஊடகத்திற்கு உணர்வுப்பூர்வமாக அளித்த பேட்டியில், "இந்த உதவி தங்களின் குடும்பக் கல்வி நிதிச்சுமையை அடியோடு குறைத்துள்ளது என்றும், அன்றாடப் பாட வேலைகளையும் அசைன்மென்ட்டுகளையும் துல்லியமாகச் செய்ய இது ஒரு பெரும் வரப்பிரசாதம்" என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி பிரதமர், அமைச்சர் மற்றும் மித்ராவிற்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பித்தனர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இந்திய மாணவர்களின் கல்விச் சுமையைத் தாங்கி, அவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் மித்ராவின் இந்த அசாத்திய சேவை, மலேசிய இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

Related News