"பட்டர்வெர்த், பகான் டாலாம், உஜோங் பத்து மீனவர் படகுத்துறை அருகே உள்ள சேற்றுப் பகுதியில் சிக்கிக்கொண்ட 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் இன்று பத்திரமாக மீட்டனர்.
இன்று காலை 11.40 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, பட்டர்வெர்த் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு, சுமார் 30 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு முதியவரை மீட்டெடுத்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் அந்த முதியவர், தவறி விழுந்து சேற்றில் ஆழமாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.
பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர்கள், ஸ்ட்ரெச்சர் உதவியுடன் அவரை மீட்டெடுத்து, உரிய சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது."








