May 6, 2026
Thisaigal NewsYouTube
மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்
தற்போதைய செய்திகள்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

Share:

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா அண்மையில் வழங்கிய அரச உரை, மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது போல் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் அரச சபை மறுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 15-வது அமர்வின் நான்காவது கூட்டத்தொடர் தொடக்க விழாவில், சுல்தான் வழங்கிய உரையானது, அரசியலமைப்பு சட்ட மன்னராட்சி கொள்கைகளுக்கு முழுமையாக இணங்குவதாக சிலாங்கூர் அரண்மனை அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசரின் உரை அல்லது ‘titah’ என்பது அரண்மனை மரபு மொழியில் வழங்கப்படும் அறிவுரையாகும்.

அது அரசியலமைப்புச் சட்ட மன்னரின் கடமைகளுடன் ஒத்துப்போகிறது என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுல்தானின் உரையானது, மாநில அரசின் நடவடிக்கைகள், கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், சிலாங்கூர் மாநில அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்கும் இணங்க உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கும், மக்களின் நலன் மற்றும் நலவாழ்வை கருத்தில் கொள்ளுவதற்குமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாங்கூர் மாநில நிர்வாகத்தில் மக்கள் நலனை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து மந்திரி பெசார், சுல்தானுடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று சிலாங்கூர் அரச சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைகள் மூலம் மாநிலத்தின் நிலைமைகளை சுல்தான் அறிந்து கொண்டு, முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன் தேவையான வழிகாட்டுதலை வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், சுல்தான் வழங்கும் அறிவுரைகள் அரசியல் நோக்கமற்றவை என்றும், அவை மக்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்திலேயே வழங்கப்படுவதாகவும் அரச சபை விளக்கமளித்துள்ளது.

மேலும், வெள்ளம், குப்பை அகற்றம், சாலை சேதம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக சுல்தானிடம் புகார் அளித்து வருவதாகவும், சுல்தான் வெறும் சடங்கு ரீதியான தலைவராக இல்லாமல், அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்புடனும் செயல்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News