1.11 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சாய், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிசி ரம்லியின் முன்னாள் உதவியாளருமான ஜேம்ஸ் சாய், இன்று காலை சுமார் 10 மணியளவில் வெள்ளை நிற காரில் தலைமையகத்தை வந்தடைந்தார்.
முன்னதாக, வெளிநாட்டில் இருந்த ஜேம்ஸ் சாய், விசாரணைக்காக மலேசியா திரும்பி வருவதை, எஸ்.பி.ஆர்.எம்.க்கு அறிவித்ததாக, அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கி உறுதிப்படுத்தியிருந்தார்.
மேலும், இந்த விசாரணை தொடர்பாக ஜேம்ஸ் சாயை முன்பே கண்காணித்து வந்ததாகவும் எஸ்.பி.ஆர்.எம். தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜேம்ஸ் சாயை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனமான கேசவன் வழக்கறிஞர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் உள்ள அவரது பணியிட நிறுவனத்தின் அனுமதியை பெற்ற பின்னரே மலேசியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் சாய் தற்போது எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








