மலேசியாவில் முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்களைத் திட்டமிடுதல் மற்றும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல் வரைவு அறிக்கை விரைவில் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் இது குறித்துத் தெரிவிக்கையில், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு இந்த வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சமூகத்தில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களைத் தரவுகளின் அடிப்படையில் கையாள்வதற்காக 'பிரிஸ்மா' எனும் புதிய தளத்தையும் அமைச்சரவை உருவாக்கி வருகிறது.
சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், அண்டை வீட்டாருக்கு இடையிலான சச்சரவுகள், சத்தம் மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான சிறிய அளவிலான புகார்களைத் தீர்க்க நாடு முழுவதும் 12 புதிய சமூக மத்தியஸ்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கோலாலம்பூர், லாபுவான் உட்பட 10 மாநிலங்களில் அமையவுள்ள இந்த மையங்கள், சிறிய மோதல்கள் பெரிய அளவில் வெடிக்காமல் சுமூகமாகத் தீர்க்க உதவும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.








