ஷா ஆலாம், ஜனவரி.19-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக், முன்னாள் சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸ் மற்றும் GB Gerakbudaya பதிப்பகத்திற்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.
தோம்மி தோமஸின் சுயசரிதை நூலான My Story: Justice in the Wilderness – ஸில் இடம் பெற்ற சில கருத்துகளுக்காக டத்தோ ஶ்ரீ நஜீப் இந்த வழக்கை தொடுத்தார். தற்போது இரு தரப்பினரும் எட்டியுள்ள உடன்பாட்டின் அடிப்படையில், இந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி கதிஜா இட்ரிஸ் முன்னிலையில் இந்த சமரசம் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, நஜிப் தனது வழக்கை மீட்டுக் கொள்கிறார். மீண்டும் இதே புகார் மீது வழக்கு தொடர முடியாது என்ற கருத்திணக்கத்தின் அடிப்படையில் சமரசம் காணப்பட்டது.
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை வழக்கில் நஜிப்புக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும், தனது புத்தகம் வெளியான 2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமக்குத் தெரியவில்லை என்று தோம்மி தோமஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது புத்தகம் இனி வரும் காலங்களில் மறுபதிப்பு செய்யப்பட்டால், நஜிப் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள 404 மற்றும் 405-வது பக்கங்களில் இந்த விளக்கத்தையும் சேர்த்துக் கொள்வதாக தோம்மி தோமஸ் உறுதி அளித்துள்ளார்.








