கோலாலம்பூர், ஜூன்.01-
மலேசியாவில் உள்ள 9 மில்லியனுக்கும் அதிகமான சொக்சோ சந்தாதாரர்களுக்கு, வேலை நேரத்தைத் தாண்டியும் 24 மணி நேரமும் முழுமையான விபத்து பாதுகாப்பு அளிக்கும் புதிய 'லிண்டுங் 24 ஜாம்' (LINDUNG 24 Jam) திட்டம் இன்று ஜுன் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது என்று மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது பணியில் இருக்கும் முறைசார் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் தானாகவே நடைமுறைக்கு வருவதால் புதிய பதிவு தேவையில்லை. எனினும், ஜூன் 1, 2026-க்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேருபவர்களை முதலாளிகள் வழக்கம் போல் சொக்சோ அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
6 ஆயிரம் ரிங்கிட் சம்பள உச்சவரம்புக்கு உட்பட்டு, மாதச் சம்பளத்தில் 0.75 விழுக்காடு ஆரம்ப விகிதமாக தொழிலாளர்களிடம் இருந்து கழிக்கப்படும்.
மருத்துவ நலன்கள், தற்காலிக/நிரந்தர ஊனமுற்றோர் பலன்கள், சார்ந்திருப்பவர்களுக்கான பலன்கள், மரணச் சடங்கு மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 8 பலன்கள் வழங்கப்படும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் விளக்கினார்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ILO பரிந்துரைகளுக்கு இணங்க கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தின் பலன்களைப் பெற, தகுதியுடையவர்கள் lindungfaedah.perkeso.gov.my என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.








