ஈப்போ, ஜூன்.01-
பேரா, மஞ்சோங், பெக்கான் கெர்னி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட, இந்தோனேசிய நாட்டவர்கள் என நம்பப்படும் மூன்று ஆண்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 6.27 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடமிருந்து இது குறித்துப் புகார் கிடைத்துள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். சந்தேக நபர்கள் மூவர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து மிரட்டி, 10,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.
இதே பாணியில் இந்த ஆண்டில் மட்டும் ஆயர் தவார் மற்றும் பெக்கான் கெர்னி பகுதிகளில் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு உதவலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








