காராக், டிச.2-
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறியவும், நிர்வாகத்தினரை சந்திக்கவும் நல்லெண்ணப் பயணத்தை தொடங்கியுள்ள மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவைத் தலைவர் டத்தோ என். சிவகுமார், முதல் மாநிலமாக பகாங்கில் உள்ள சில கோவில்களுக்கு வருகை புரிந்துள்ளார்.
கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் பகாங் மாநிலத்தில் உள்ள சில ஆலய நிர்வாகத்தினரை டத்தோ சிவகுமார் சந்தித்தார்.

நவம்பர் 23 ஆம் தேதி பெந்தோங் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் சிறப்பு பூஜைகளில் டத்தோ சிவகுமார் கலந்து கொண்டதுடடன் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்தார். இதேபோன்று காராக், ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயத்திற்கும் வருகை மேற்கொண்டு, ஆலயப் பொறுப்பாளர்களை சந்தித்தார்
நவம்பர் 24 ஆம் தேதி குவந்தான் பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கும் டத்தோ சிவகுமார் வருகை புரிந்தார். மஹிமாவின் தலைவர் என்ற முறையில் டத்தோ சிவகுமாரை வரவேற்று பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு செய்தனர்.

அன்றைய தினம் மெந்தகாப், ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயம் மற்றும் மெந்தகாப், அருள்மிகு கல்லுகோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கும் டத்தோ சிவகுமார் வருகை புரிந்தார். தவிர காராக், புக்கிட் டிண்டிங் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கும் அவர் வருகை புரிந்து ஆலய நிர்வாகத்தினருடன் சந்திப்பு நடத்தினார்.
முன்னதாக ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுப்பூஜையிலும் டத்தோ சிவகுமார் கலந்து கொண்டார்.
பகாங் மாநிலத்திற்கு அடுத்து, நெகிரி செம்பிலானில் உள்ள ஆலயங்களின் பொறுப்பாளர்களையும் டத்தோ சிவகுமார் சந்திக்கவிருக்கிறார்.








