கிள்ளான் மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவினரின் சோதனையின் போது 'ராக்கி' என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, 70-க்கும் மேற்பட்ட பிராணிகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகர் மன்ற தலைமையகத்திற்கு வெளியே திரண்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி போர்ட் கிள்ளானில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, நாயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கயிறு அதன் கழுத்தை இறுக்கியதால் ராக்கி உயிரிழந்தது. இது குறித்து உலக மனித உரிமைகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். சசிக்குமார் கூறுகையில், தெரு விலங்குகளைப் பிடித்துக் கொல்வதை விடுத்து, அவற்றுக்குக் கருத்தடை செய்து முறையான தங்குமிடங்களை அமைத்து நிர்வகிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். இதற்காகச் தொண்டு நிறுவனங்களுக்கு பத்து ஹெக்டேர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் குறித்துத் தற்காத்துப் பேசியுள்ள கிள்ளான் மாநகர் மன்றம் அமலாக்க அதிகாரிகளிடம் நாயின் உரிமையாளர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் கயிற்றைத் தளர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2015 ஆம் ஆண்டு பிராணிகள் நலச் சட்டத்தின் கீழ் பிராணிகள் வதை தொடர்பாகப் பல சாட்சிகளிடமிருந்து சிலாங்கூர் கால்நடை மருத்துவச் சேவைகள் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.








