ஜசெக, அரசாங்கப் பதவிகளிலிருந்து தனது தலைவர்களை மீட்டுக் கொண்டாலும், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்குப் போதிய பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்று பிகேஆர் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜசெக தலைவர்கள் விலகினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுப் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்ற பாஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்துப் பேசிய பிகேஆர் துணைப் பொதுச் செயலாளர் சைபுடின் ஷாஃபி முஹம்மது, இக்கோரிக்கை முதிர்ச்சியற்றது என்று சாடினார். வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜசெக மாநாட்டில், அக்கட்சி அரசுப் பதவிகளில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறியிருந்தார்.
இது குறித்து விளக்கிய சைபுடின் ஷாஃபி, ஜசெகவின் அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் தலைவர்களைப் பதவிகளில் இருந்து விலகக் கூறினாலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளும் கூட்டணியிலேயே நீடிப்பார்கள் என்பதால் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
மக்கள் வழங்கிய ஆணையின்படி இந்த ஒற்றுமை அரசாங்கம் தனது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் சைபுடின் ஷாஃபி தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.








