Aug 5, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

Share:

மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி ஒருவர் ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகளின் பின்னணி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைக் கடுமையாக்குமாறு மலேசியா ஏவியேஷன் குரூப்பான எம்.எ.ஜி நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த விவரங்களை வெளியிட்ட தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், உள்துறை அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் பரிந்துரையின்படி இவ்விவகாரத்தில் பல உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக, விமானப் பாதுகாப்புப் பணிகளில் தற்போதுள்ள உதவிப் போலீசாருக்குப் பதிலாக அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகள் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டத்தோஸ்ரீ ஃபாஹ்மி தெரிவித்தார். மேலும், நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அடைக்குமாறு போலீஸ் படைக்கும், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

இந்த அதிரடி உத்தரவுக்குக் காரணமாக அமைந்த சம்பவத்தில், 39 வயதான மலேசியத் துணை விமானி ஒருவர், ஜகார்த்தா சோகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் 26 கிலோகிராம் எடையுள்ள ஷாபு போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயன்றபோது இந்தோனேசிய சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதையும் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி சுட்டிக்காட்டினார்.

Related News