கோலா கங்சார், எங்கோர் பகுதியில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான விக்டோரியா பாலத்தில் இருந்து 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாலத்தில் முழுமையான தொழில்நுட்ப விசாரணையும் பாதுகாப்புத் தணிக்கையும் நடத்த வேண்டும் என மலேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சங்கமான MSOSH வலியுறுத்தியுள்ளது.
பாலத்தில் உள்ள திறப்புகள், தடுப்புகளின் உயரம் மற்றும் வடிவமைப்பு, நடைபாதைகள், விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என MSOSH தலைவர் அகமத் ஃபக்ருல் அன்வார் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மாலை தனது தந்தையுடன் விக்டோரியா பாலத்திற்குச் சென்ற அப்துல் ரஃபி அப்துல் ஹலீம் என்ற 3 வயது சிறுவன், பாலத்தில் இருந்த திறப்பின் வழியாக சுமார் 5 மீட்டர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோலாக் கங்சார் நகராட்சி பொதுமக்கள் பாலத்தைப் பார்வையிடச் செல்வதைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.








