தமிழகத்தின் கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மலேசியாவைச் சேர்ந்த 52 வயது லோகநாதன் மற்றும் அவரது 21 வயது மகன் யுகேந்திரன் ஆகியோர் அடையாளம் தெரியாத இருவரால் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
காயமடைந்த இருவரும் மதுக்கரை-யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 மலேசிய சுற்றுலாப் பயணிகள் கேரளாவின் ஆலப்புழா-வில் இருந்து சென்னை நோக்கி வாடகை வேனில் சென்று கொண்டிருந்தனர்.
மாலை சுமார் 5.30 மணியளவில் கொச்சின்–சேலம் விரைவுச் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே வேன் நிறுத்தப்பட்ட போது, சாலையில் இருந்த இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
இதனையடுத்து அவர்கள் லோகநாதன் மற்றும் யுகேந்திரன்-ஐ அரிவாளால் தாக்கியதுடன், வேனின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு ஓட்டுநர் வேனை மதுக்கரை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். ஆனால், இருவரும் இருசக்கர வாகனத்தில் வேனைத் துரத்திச் சென்று மதுக்கரை சந்தைப் பகுதியில் மீண்டும் வழிமறித்தனர்.
இந்நிலையில், அவர்களில் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டியதால் ஓட்டுநர் வேனை நிறுத்தியுள்ளார்.
எனினும், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அங்கு திரண்டதும் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொச்சின்–சேலம் விரைவுச்சாலைப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி
காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








